திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு குழுக்கள் இன்று பேச்சுவார்த்தை
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் இடப் பங்கீடு குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
திமுக குழுவில் துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுபபினர் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்த இரு குழுவினர் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
முன்னதாக காங்கிரஸ் குழுவினர் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் பல நாட்கள் ஆலோசனை நடத்தினர்.
அதில் பேசிய பெருமபாலோனார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் திட்டப்படி, திமுகவிடம் 90 இடங்களைக் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்றனர். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை இந்தக் குழு சந்தித்து தங்களது கட்சியினரின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால், காங்கிரசுக்கு அதிகபட்சமாக 60 இடங்கள் வரை தர திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில் இரு குழுக்களும் சந்தித்து முதல் முறையாக பேச்சு நடத்துகின்றன.
மாலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதையடுத்து சோனியா காந்தி-கருணாநிதியின் ஒப்புதலுடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழகம் வந்து முதல்வருடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications