கருணாநிதி குடும்பத்தார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்-டாக்டர் கிருஷ்ணசாமி
கோவை: கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளதால், எந்த நேரத்திலும் கருணாநிதி குடும்பத்தார் கைது செய்யப்படலாம். எனவே, கருணாநிதி தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் நீடிப்பது முறையற்றது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்றுள்ளது. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.பி ரியாலிட்டியின் துணை நிறுவனம் ஆகும்.
ஆ.ராசா மூலம் பெற்ற இந்த சலுகைக்காக இந்த நிறுவனம் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்திற்கு பெரிய தொகையை அளித்துள்ளது என்பதே முக்கிய குற்றச்சாட்டு.
அதை நிரூபிக்கும் வகையில் டி.பி ரியாலிட்டியின் துணை நிறுவனங்களான குசேக்கான், சினியூக் வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியுள்ளது. இது கலைஞர் தொலைக்காட்சி மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்களிலும் தெளிவாக உள்ளது. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி அளித்ததற்காகவே டி.பி ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சி முழுக்க முழுக்க முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி ஆகும். இதில் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 80 சதவீத பங்கும், அவரது மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்கும் உள்ளது. எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் ஊழல் பணமே கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த செயல் முதலமைச்சர் நாற்காலிக்கு பெருத்த அவமானம். எந்த நேரத்திலும் கருணாநிதி குடும்பத்தார் கைது செய்யப்படலாம்.
எனவே, கருணாநிதி தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் நீடிப்பது முறையற்றது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். மேலும், அவரது குடும்பத்தாரும் முழு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications