'நடுக்கண்டம் எனக்கு என்று நான் அடம்பிடிக்கவில்லை!' - திருமாவளவன்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென கூட்டணியின் தலைவர் முதல்வர் கருணாநிதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
'நடுக்கண்டம் எனக்கு' என்று அடம்பிடிக்கும் போக்கில்லாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்
குறைந்தது பதினைந்து தொகுதிகளிலாவது போட்டியிட்டால்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும்அளவிலான இடங்களில் வெற்றிபெற இயலும். ஆகவேதான், பதினைந்து தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கோரியது.
தற்போதுள்ள சூழலில் நடைமுறை சாத்தியக் கூறுகளைக் கணக்கில் கொண்டு, கூட்டணியிலுள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப்பாங்கோடு, கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்கிற தோழமையுணர்வோடு, எமது எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.
எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தி அணி மாறுவோமென திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுக்காமல் அரசியலில் நம்பகத்தன்மையின் அடையாளம் விடுதலைச் சிறுத்தைகள்' என்று மீண்டும் நிலைநாட்டும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.
நாம் பெற்ற பத்து 10 தொகுதிகளையும் வெற்றிபெற வைப்பார்கள். அந்த நம்பிக்கையோடு களமிறங்குவோம். நாம் இடம் பெற்றுள்ள தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெற்றத் தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. என்கிற வரலாற்றுப் பதிவை இந்தத் தேர்தலில் உருவாக்குவோம். கூட்டணியின் ஒத்துழைப்போடும், பொதுமக்களின் நல்லாதரவோடும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றெடுப்போம்.
போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. தவறாமல் விடுதலைச் சிறுத்தைகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.