முதல்வர், அமைச்சர்கள், மேயர்கள் குறித்த விவரங்களுக்கு அரசு இணையதளத்தில் தடை

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்கியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கெடுபிடிகளையும், கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தமிழக அரசின் இணையதளத்தில் முதல்வர், அமைச்சர்கள், மாநகர மேயர்கள் குறித்த விவரங்கள் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர், அமைச்சர்கள், மேயர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களைக் கூட காண முடியவில்லை.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டையும் பார்க்க முடியாதபடி அந்த இணைப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுபோக பல்வேறு துறைகளின் இணைப்புகளையும் (லிங்குகள்) முடக்கி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதுவரை சேலம், கோவை, திருநெல்வேலி மாநகர மேயர்கள் மற்றும் அவர்களது அறிவிப்புகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் கேட்டபோது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது நியாயமான நடவடிக்கைதான். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, அரசின் செலவில் மக்களிடம் எதையும் சொல்லக் கூடாது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை விட உச்சமாக பிரவீன் குமார் அறையில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதியின் படத்தையும் அகற்றி விட்டனர். அதேபோல அவரது அறைக்கு வெளியே ஆங்காங்கு (தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலக வளாகத்தில்) வைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பரப் பலகைகளையும் கூட எடுத்து விட்டனர்.
இதுதவிர தீவுத் திடலில் நடந்து வரும் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் படங்களையும் கூட எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications