ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்-திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!-வைகோ
மதுரை: ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கும், அதற்குத் துணை போன திமுகவுக்கும் வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதுரையில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் அவர் பேசுகையி்ல், அதிமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகிறது. இதில், மதிமுகவுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றெல்லாம் எங்கள் கட்சியினர் கேட்பதில்லை. தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்கும் கட்சி மதிமுக. உண்மையான திமுக என்பது மதிமுகதான் என்பதை காலம் நிரூபிக்கும்.
ஈழத்தில் தமிழனத்துக்கு துரோகம் செய்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், அதற்குத் துணை போன திமுகவுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வரும் தேர்தலில் பண நாயகம் கட்டுப்படுத்தப்பட்டு, ஜனநாயகம் வெல்லும், நிரந்தர விடியல் நிச்சயம் உண்டு. நம்பிக்கையோடு நாம் கடமையாற்றுவோம் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திமுக- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாகச் செய்திகள் வந்துள்ளன. கூட்டணியில் தொடர காங்கிரசுஸ் விரும்பவில்லை என்று தெரிவதாக கருணாநிதி வெளியிடும் கருத்து மூலம் தெரிகிறது. இதுகுறித்து திட்டவட்டமாக முடிவுகள் வெளியான பின்புதான் கருத்துக் கூற முடியும் என்றார் வைகோ.