சட்டசபை தேர்தலில் கருணாநிதி போட்டியிட மாட்டாரா?
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 11 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தற்போது 12-வது தடவையாக தேர்தல் களத்தில் இறங்கமாட்டார் என்ற கருத்து வலுத்து வருகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலின்போதே இது தான் எனது கடைசி தேரத்ல் என்றார். அவ்வாறு சொல்லக் கூடாது என்று கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று மீண்டும் 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி வெற்று முதல்வரானார். உடல்நிலை முன்புபோல ஒத்துழைக்காததால் ஓய்வு பெறுவதில் நாட்டம் காட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கூட நான் தமிழக முதல்வராக இருப்பதைக் காட்டிலும், கட்சித் தலைவராகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். மேலும் மகன் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்க தயாராகிவிட்டதாலும், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று திமுகவில் குரல் எழும்பியுள்ளதாலும் முன்மாதிரியாக தான் இந்த தேர்தலில் நிற்காமல் இருக்க எண்ணிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
வரும் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு ஓய்வு எடுப்பாரா என்பது கருணாநிதியின் முடிவில் தான் இருக்கிறது.
2வது நாளாக தொடர்ந்த நேர்காணல்:
இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் இன்று 2வது நாளாக நேர்காணல் தொடர்ந்தது.
நேற்று நடந்த முதல் நாள் நேர்காணலின்போது விடுபட்ட 6 தூத்துக்குடி தொகுதிகள், ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் இன்று நடந்தது.
திருச்செந்தூருக்கு விருப்ப மனு கொடுத்திருந்த அனிதா ராதாகிருஷ்ணன், ராதிகா செல்வி, தூத்துக்குடி கீதா ஜீவன் ஆகியோர் இன்றைய நேர்காணலில் கலந்து கொண்டனர்.
இதேபோல, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடமும் நேர்காணல் நடந்தது.
இதேபோல மாலையில், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினருக்கு நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.