தொலைபேசி உரையாடல் வெளியான வழக்கு: மாஜி தலைமை செயலர் திரிபாதி சாட்சியம்
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டு பத்திரிக்கையில் வெளியான வழக்கில் நேற்று திரிபாதி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு, தலைமைச் செயலாளராக இருந்த எல்.கே.திரிபாதியும், உபாத்யாயாவும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
லஞ்ச ஊழல் வழக்குகள் தொடர்பாக உபாத்யாயாவிடம் அதில் பேசியிருந்தார் திரிபாதி. இதை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது.
இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக ஊழியர் சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு 5-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. வழக்கை நீதிபதி சாவித்தி்ரி விசாரிக்கிறார். தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று அரசுதரப்பு சாட்சியாக திரிபாதி விசாரிக்கப்பட்டார்.
தொலைபேசி உரையாடலை பதிவு செய்யும் தொழில்நுட்ப வசதி தனது அலுவலகத்தில் இல்லை என்று அவர் தெரிவித்தார். தான் இந்த வழக்கிற்காக ஒரிசாவில் இருந்து வந்துள்ளதால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதை ஏற்க சங்கரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மறுத்துவிட்டார். அவரிடம் பல கேள்விகள் கேட்க வேண்டியிருப்பதால் குறுக்கு விசராணையை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து குறுக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications