திமுகவுக்கே ஓட்டுப் போடுங்கள்-அதிமுக, காங் வேண்டாம்: மதிமுகவினருக்கு ரகசிய உத்தரவு!
சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என்று வைகோ அறிவித்ததும் மதிமுகவினர் நிலை குலைந்து போனார்கள். வைகோ இப்படி சொல்லி விட்டாரே என்பதனால் அல்ல- அதிமுக நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதே என்ற வேதனையில்தான்.
இதுவே வேறு ஒரு இயக்கமாக இருந்திருந்தால் இன்னேரம் கட்சி கண்ணாபின்னாவென காணாமல் போயிருக்கும். ஆனால் வைகோவின் இயக்கம் என்பதால் மதிமுக இன்னும் சீர்குலையாமல், அப்படியே இருக்கிறது -ஆங்காங்கு ஒரு சில, செல்வாக்கில்லாதவர்கள் விலகியதைத் தவிர.
இந்த நிலையி்ல் மதிமுகவினருக்கு ரகசிய வாய்மொழி உத்தரவு ஒன்று சென்னையிலிருந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள மூலமாக பாஸ் ஆகியுள்ளதாம்.
அது - வருகிற தேர்தலில் உங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம். அனைவரும் திமுகவுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். மறந்தும் கூட அதிமுகவுக்கு வாக்களித்து விடக் கூடாது. அதில் மிகவும் கவனமாக இருங்கள். அதேபோல காங்கிரஸுக்கும் நமது ஒரு வாக்கு கூட போகக் கூடாது. நமது வாக்குகளை தேடித் தேடி போய் வீணடிக்க வேண்டாம் என்று கூறி, திமுகவுக்கு அதை செலுத்துவதை உறுதி செய்யுங்கள் என்று அந்த உத்தரவு கூறுகிறதாம்.
இதனால் உற்சாகமடைந்துள்ள மதிமுகவினர், தங்களது தாய்க் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. சில இடங்களில் மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மறைமுகமாக திமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கின்றனராம்.
தேர்தல் முடிந்த பின்னர் வைகோ மீண்டும் திமுக அணிக்குத் திரும்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.