கருணாநிதி குடும்பத்தினர் மீது விமர்சனம்: ஜெ., விஜயகாந்த் மீது புகார்
சென்னை: கருணாநிதி மற்றும் அவருடைய குடும்பத்தினரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் ஜெயலலிதா, விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது.
தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:
மதுரையில் இருக்கும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் என்று ரத்து செய்துவிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
இந்த நடவடிக்கை எந்த வகையிலும் சட்டப்படி முறையானதாக இல்லை. மேலும் தொடர்ந்து கேபினட் தகுதியில் உள்ள ஒருவருக்கு பாதுகாப்பை திடீர் என்று திரும்ப பெறுவதால் அவரது பாதுகாப்பும், அரசு பயணமும், அலுவல்களும் முடங்கிப்போகும்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திரும்ப பெறப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் வழங்க வேண்டும். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதியையும், அவருடைய குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்.
அதாவது 'ஆசியாவிலேயே கருணாநிதி குடும்பம் மிகவும் பணக்கார குடும்பம். அனைத்து அரசு திட்டங்களிலும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. கருணாநிதி அரிசி கடத்தலை ஊக்குவித்தார். பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்தார். ரியல் எஸ்டேட் பிசினஸ், திரைத்துறை ஆகியவற்றை கருணாநிதி குடும்பம் கபளீகரம் செய்துவிட்டது,' என உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். இந்த பிரசாரம் ஜெயா டி.வி., ஜெயா பிளஸ் டி.வி.களில் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.
இதுபோல தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முதல்வர் கருணாநிதி மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை கூறி பிரசாரம் செய்கிறார். அவரது கேப்டன் டி.வி.யிலும் ஒளிபரப்புகிறார். இவை தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். எனவே ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications