திருச்சியில் தனியார் ஆம்னி பேருந்தில் ரூ. 5 கோடியே 11 லட்சம் பறிமுதல்
திருச்சி: திருச்சியில் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் இருந்து ரூ. 5 கோடியே 11 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி பொன்நகர் வீதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே பணம் கடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரக்சிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வருவாய் கோட்டாச்சியர் சங்கீதா தலைமையிலான அதிகாரிகள் நள்ளிரவு 2 மணிக்கு அங்கு விரைந்து சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உள்ள 5 பைகளில் 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் இருந்தன. இதில் மொத்தம் ரூ. 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் சிக்கியது. இதற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணத்தையும், பேருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
வாகன சோதனையில் ஒரே நேரத்தில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications