ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி: கேரள முதல்வர் அச்சுதானந்தன்-காங். கண்டனம்
பாலக்காடு: காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த அமுல் பேபி கேரள மாநிலத்தில் சில அமுல் பேபிகளை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் விமர்சித்துள்ளார்.
கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தற்போதைய முதல்வர் அச்சுதானந்தனின் வயதைக் குறிப்பிட்டு இந்த வயதில் அவரை மீண்டும் முதல்வர் ஆக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல்(40) கேரள பிரசாரத்தின்போது பேசியதாவது,
மீண்டும் அச்சுதானந்தன் முதல்வரானால் அடுத்த 5 ஆண்டு இறுதியில் 93 வயதுள்ளவர் கேரள முதல்வராக இருப்பார் என்று கூறினார். அதற்குத் தான் ராகுல் ஒரு அமுல் பேபி என்று அச்சுதானந்தன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன்(87) கூறியதாவது,
இந்த வயதிலும் நான் இவ்வளவு சுறுசுறுப்பாக அரசியல் வாழ்க்கையில் இருப்பது என் குற்றமா. 16 வயதில் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடத் துவங்கினேன். பல போராட்டங்களை எல்லாம் பார்த்து தான் இந்த நிலையில் இருக்கிறேன். எந்த ஊழல் வாதிகளுக்கும் இந்நாள் வரை தலைவணங்கியது கிடையாது. ராகுல் ஒரு அமுல் பேபி. அந்த அமுல் பேபி மாநிலத்தில் உள்ள மேலும் சில அமுல் பேபிகளுக்கு ஆதரவாக பேச வந்துள்ளது என்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள அச்சுதானந்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.