2ஜி வழக்கு: சு.சாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு

சிபிஐயின் முதல் தகவலறிக்கையுடன் தனது புகார் மனு இணைக்கப்பட்டால் தனக்கு ஆட்சேபணை இல்லை என சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இதுகுறித்து மே 4-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி சிபிஐக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக சிபிஐயின் எஃப்ஐஆருடன் உங்களது புகாரை இணைக்க விருப்பமா என சாமியிடம் நீதிமன்றம் கேட்டது. 'அப்படி இணைத்தால் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்', என சுவாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பதிலளிக்க தங்களுக்கு 2 வாரம் அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான ஏ.கே.சிங் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிபிஐக்கும், உச்சநீதிமன்றத்தால் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கும் உதவிசெய்யத் தயாராக உள்ளதாக சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும்!
முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருப்பதாக சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் சாமி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications