ஹசன் அலிக்கு உதவி-பனாமா நாட்டு இந்திய தூதருக்கு சம்மன்
மும்பை: ஹவாலா மோசடி மன்னன் ஹசன் அலிக்கு உதவியதாக பனாமா நாட்டில் உள்ள இந்தியத் தூதர் விஷ்ணு ஹாடே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பவுள்ளனர்.
போலி பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் முதலீடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றங்களுக்காக புனே நகரை சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் கிடைக்க உதவியதாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் அலியின் ஹவாலா மோசடிகளுக்கு உதவியதாக பனாமா நாட்டுக்கான இந்தியத் தூதர் விஷ்ணு ஹாடே மீதும் புகார் கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து விஷ்ணு ஹாடேக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வெளியுறவுத்துறையின் அனுமதியைக் கோரியுள்ளனர்.
இதுகுறித்து மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் வினீத் அகர்வால் கூறுகையில், இந்திய தூதர் மீது குற்றம் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications