பெரியார், அண்ணா சிலைகளுக்கு கருணாநிதி அஞ்சலி-மகளைப் பார்க்க டெல்லி போகவில்லை
சென்னை: மகள் கனிமொழியை திஹார் சிறையில் வைத்துப் பார்ப்பதற்காக டெல்லி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று டெல்லி போகவில்லை. மாறாக சென்னையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள கனிமொழி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டது.
இந் நிலையி்ல் இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை கருணாநிதி ரத்து செய்து விட்டார். மேலும் நாளை திருவாரூர் போய் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டதால் இவற்றை ரத்து செய்து விட்டு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்பதால் தனது டெல்லி பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.
நினைவிடங்களில் அஞ்சலி
தனது பிறந்த நாளை கருணாநிதி மிகவும் எளிமையாக கொண்டாடினார். இன்று காலை பெரியார் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுகவினர் அமைதியான கொண்டாட்டம்
இதற்கிடையே தமிழகம் முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இருப்பினும் வழக்கமான உற்சாகத்தை திமுகவினரிடம் காண முடியவில்லை. கனிமொழி, ராசா சிறையில் அடைபட்டிருப்பது, திமுக ஆட்சியை இழந்து நிற்பது, தயாநிதி மாறனை நோக்கி விசாரணை வளையம் விரிய ஆரம்பித்திருப்பது என கட்சி பெரும் இக்கட்டான நிலையில் இருக்கும் நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுரத்தே இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications