ராம்தேவ் வெளியேற்றத்தில் மனித உரிமை மீறல்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய உள்துறை செயலாளர், டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்தேவ் வெளியேற்றப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து இன்று விசாரித்தது. அதன் பின்னர் இந்த நோட்டீஸைப் பிறப்பிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர், டெல்லி போலீஸாரின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சி தருவதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறல் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
தங்களது உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு நீதிபதிகள் கூறுகையில், போலீஸாரின் மிருகத்தனமான நடவடிக்கையை டிவியில் பார்த்து நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். நள்ளிரவு 1.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை விரட்டியடிக்க வேண்டிய அவசியம் என்ன?. அப்படி என்ன கட்டாயம் வந்தது காவல்துறைக்கு என்று நீதிபதிகள் கேட்டனர்.
முன்னதாக ராம்தேவ் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து அஜய் அகர்வால் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்திருந்தார். இருப்பினும் இந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்து டிஸ்மிஸ் செய்து விட்டனர்.












Click it and Unblock the Notifications