கங்கையை காக்க 115 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சாது மரணம்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த சுவாமி நிகாமனானந்த் கங்கை நதி மாசுபடுவதை தடுக்கக் கோரியும் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கல் குவாரிகளை அகற்றக் கோரியும் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நான்கு மாதங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போல இவர் குறித்த தகவல்களை வட இந்திய மீடியாக்கள் பெரிதாக வெளியிடவில்லை.
இந் நிலையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால், கடந்த மே மாதம் 2ம் தேதிஅவர் கோமாநிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.
உண்ணாவிரதம் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட பாபா ராம்தேவும் இதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இரவில் நடந்ததை நாடு மறக்காது-ராம்தேவ்:
இந் நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து ஆசிரமம் திரும்பிய ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ஊழலுக்கு எதிராக இந்தியா விழித்துக் கொண்டுவிட்டது. எனினும் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக நான் தொடர்ந்து போராட உள்ளேன்.
எனது உண்ணாவிரதப் போராட்டத்தை போலீஸை விட்டு தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். அந்த இரவில் நடந்ததை இந்தியா ஒருபோதும் மறக்காது. அது ஒரு கறுப்பு இரவு. அமைதியாக போராடியதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்றார்.