வீடு புகுந்து மாணவியை தாக்கிய வாலிபர்கள்-நடவடிக்கை எடுக்காத போலீஸ்
சென்னை: எழும்பூரில் வீடு புகுந்து மாணவியை தாக்கிய வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதால், போலீஸ் கமிஷனரிடம் அவரது தாயார் புகார் மனு தந்துள்ளார்.
எழும்பூர் தாசபிரகாஷ் ஹோட்டல் அருகே உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வரும் தம்பதி செல்லப்பா- தமிழ்ச்செல்வி. கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் ஸ்ரீலேகா (18). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
செல்லப்பா குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந் நிலையில் அந்த வாலிபர்கள் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து செல்லப்பாவைத் தாக்கினர்.
அவர் தப்பியோடவே, மகள் ஸ்ரீலேகாவைத் தாக்கினர். இதில் படுகாயமைடந்த அந்தப் பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்ச்செல்வி இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மகளுடன் நான் துணைக்கு அமர்ந்திருந்தபோது அங்கும் வந்து அந்த வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர் என்றார்.
இந் நிலையில் அந்த வாலிபர்களில் சிலரைப் பிடித்த போலீசார் பின்னர் அவர்களை விடுவித்துவிட்டதாகவும், முக்கிய பிரமுகர் ஒருவரின் நெருக்கடியால் போலீசார் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இப்போது அந்த அந்த வாலிபர்களிடம் சமாதானமாக போகும்படி தமிழ்ச்செல்விக்கு போலீசார் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்தே அவர் லோக்கல் போலீசாரை இனியும் நம்ப முடியாது என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இங்கும் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வி.












Click it and Unblock the Notifications