நெல்லை பாஸ்போர்ட் சேவை மையம் இன்று துவக்கம்-16 கவுன்டர்கள் அமைப்பு
நெல்லை: நெல்லையில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் இன்று (30ம் தேதி) முதல் செயல்பட தொடங்குகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டு்ள்ளது. நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் இன்று முதல் செயல்படத் துவங்குகிறது. இந்த சேவை மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் கேட்பவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்வது முதல் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் பொறுப்பு ஹெச்சிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சான்றிதழ்கள், முகவரி ஆதாரச் சான்று ஆகியவறறுடன் சேவை மையத்துக்கு சென்றால் போதும். விண்ணப்பம் செய்பவர்களின் வசதிக்காக 16 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் ஊழியர்களே விண்ணப்பம் பூர்த்தி செய்வது, போட்டோ எடுப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வர். பாஸ்போர்டுக்கான தொகை ரூ.1000-த்தை ரொக்கமாக நேரடியாக செலுத்தலாம். சான்றிதழ்களின் நகல்கள் எதையும் கொண்டு செல்லத் தேவையில்லை. அனைத்து சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு திருப்பித் தரப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் டோக்கன் தரப்படும். அதன்பின்னர் அவர்கள் விண்ணப்பம் சரி பார்ப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம். தட்கல், கிழிந்த, தொலைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மறு பாஸ்போர்ட், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் நெல்லை சேவை மையத்திலும் பெறலாம்.












Click it and Unblock the Notifications