களக்காடு அருகே பஞ்சாயத்துத் தலைவி ஆக்கிரமித்த அரசு நிலம் மீட்பு
களக்காடு: களக்காடு அருகே பஞ்சாயத்துத் தலைவியால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பஞ்சாயத்திற்குட்பட்ட மலையடி கிராமம் குறிஞ்சிகுளம். இங்குள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அரை ஏக்கர் பகுதியை அதே ஊரை சேர்ந்தவரும், சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவியுமான பானு ஆக்கிரமிப்பு செய்து அதில் தென்னக்கன்றுகள் பயிர் செய்திருந்தார். மேலும் நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்திருந்தார். இதுகுறித்து வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் கருணாகரன் உத்தரவின் பேரில் நாங்குநேரி தாசில்தார் கதிரேசன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது நிலத்தை அளவீடு செய்ததில் பஞ்சாயத்து தலைவி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது. அக்கிரமிப்பை அகற்றும்படி பஞ்சாயத்து தலைவிக்கு வருவாய்த்துறையினர் தகவல் கொடுத்தனர். ஆனால் அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இதையடுத்து நாங்குநேரி தாசில்தார் கதிரேசன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் கோபிகிருஷ்ணன், களக்காடு வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அதிகாரி மது, மற்றும் வருவாய் துறையினர் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியையும், அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த தென்னக்கன்றுகளையும் அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனர். பின்னர் கம்பி வேலி அமைக்கப்பயன்பட்ட 30 கல் தூண்கள் மற்றும் 10 தென்னக்கன்றுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது பஞ்சாயத்து தலைவி பானு மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications