எனக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்து எனது இலாகாவை மாற்றி விட்டனர்- மொய்லி கோபம்
டெல்லி: சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள வீரப்ப மொய்லி, இதற்கு தனக்கு வேண்டாத சக்திகள்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தால் 3 அமைச்சர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் குருதாஸ் காமத் தனது பதவியையே ராஜினாமா செய்து விட்டார். ஸ்ரீகாந்த் ஜெனா இன்னும் கருத்து ஏதும் தெரிவிக்காமல் கடும் அதிருப்தியுடன் அமைதியாக உள்ளார்.
இவர்களில் முக்கியமானவர் வீரப்ப மொய்லிதான். சட்டத்துறை அமைச்சராக வலம் வந்த இவரை தூக்கி கம்பெனி விவகாரத்துறைக்கு மாற்றி விட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.
2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சர்ச்சைகளில் வீரப்ப மொய்லியின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதால்தான் அவரை பிரதமர் மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மொய்லி கூறுகையில், எனக்கு வேண்டாத சில சக்திகள்தான் எனது இலாகா மாற்றத்திற்குக் காரணம். பிர அமைச்சர்கள் செய்த தவறுகளுக்கும், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் போய் நிற்பதற்கும் நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும், சட்டத்துறை மீது இந்தப் பழிகளை மொத்தமாக போடுவதும் நியாயமில்லாத ஒன்று.
கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக எனது பொறுப்புகளை நான் உரிய முறையில் கவனிப்பேன். எனக்கு உள்ள ஒரே வருத்தம், சட்டத்துறையில் நான் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் பலன் கொடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் என்னை மாற்றியதுதான் என்றார்.
இதேபோல விலாஸ்ராவ் தேஷ்முக்கும் கூட அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது அதிருப்தியை அவர் பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லாம் கோ கோ விளையாட்டு போலத்தான் என்று கேஷுவலாக கூறினார் தேஷ்முக். முன்பு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த அவர் தற்போது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
இப்படி அமைச்சர்களிடையே நிலவி வரும் அதிருப்தி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், சில அதிருப்திகள் இருப்பது இயற்கைதான், எனக்கும் அது தெரிகிறது. ஆனால் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications