ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,732 கோடி வழங்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதுடன் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்காக, உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம், பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ் இந்த தகவலை வெளியிட்டார்.
ரூ.1,200 கோடி நிதி உதவியுடன், மிக முக்கிய பிரமுகர்களுக்கான விமானங்களை இயக்குவதற்கும், அரசுக்காக மீட்பு விமானங்களை இயக்குவதற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.532 கோடி ஒதுக்கவும் இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதில் ஏர் இந்தியாவுக்கு அரசு தர வேண்டிய பாக்கியே 1200 கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மீண்டும் இந்தக் குழு அடுத்த வாரம் கூடுகிறது.












Click it and Unblock the Notifications