ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை: கிராமத்தினர் சாலை மறியல்- பரபரப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை ஆவேசப்பட வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் மொக்கராஜ். இவரது மகன் பிரசாந்த் (17). இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
பள்ளியில் தமிழ் தேர்வு நடைபெற்ற போது மாணவர் பிரசாந்த் அருகில் உள்ள மாணவரை பார்த்து காப்பி அடித்து எழுதியுள்ளார்.
இதைக் கண்டுபிடித்த ஆசிரியர் பூங்குன்றன், தலைமை ஆசிரியர் சடையாண்டியிடம் மாணவன் பிரசாந்த்தை அனுப்பி வைத்தார். அங்கு மாணவர் பிரசாந்த்தை தலைமை ஆசிரியர் கண்டித்ததுடன், இனி வரும் காலங்களில் இது போன்று நடந்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் உணவு இடைவேளையின் போது வீட்டுக்கு சென்ற மாணவர் பிரசாந்த் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த அவரது பெற்றோர்களும், கிராம மக்களும் மாணவர் பிரசாந்த் தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வத்தலக்குண்டு, தாண்டிக்குடி, திண்டுக்கல் ரோட்டில் 5 மணி நேரம் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications