கல்லூரி காவலாளிகள் கொலை- நெல்லையில் 3 வாலிபர்கள் கைது
ஆலங்குளம்: அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி காவலாளிகளைக் கொலை செய்த 3 வாலிபர்களை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மூக்கூடல், பாப்பாக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு, கொள்ளை, நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் நல்லூர் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மேலச்சேவல் அருகே உள்ள நேசமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருககுட்டி( 22),இசக்கிபாண்டி(21),மகாராஜன்(21),கோவை சவரிபாளையத்தை சேர்ந்த பாண்டியராஜன்(22), உக்கிரபாளையம் ரோடு ஜி.எம்.நகரை சேர்ந்த ஹரிதாஸ்(23) என்றும், இவர்கள் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் என்றும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் விசாரித்ததில் முருகன், பாண்டியராஜன், மகாராஜன் ஆகியோர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பொறியியல் கல்லூரி காவலாளிகள் கொலையில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. கடந்த 4-5-2011 அன்று இந்த கல்லூரிக்கு முருகன், பாண்டியராஜன், மகாராஜன் ஆகியோர் பெயிண்ட் அடிக்க சென்றுள்ளனர். அப்போது ஏடிஎம்மில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக அன்று வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க உள்ளே புகுந்தனர். அப்போது அவர்களை கல்லூரி காவலாளிகள் பால்பாண்டி, சுடலைமுத்து ஆகிய 2 பேரும் தடுத்தனர்.
ஆத்திரமடைந்த முருகன், பாண்டியராஜன், மகாராஜன் ஆகியோர் 2 காவலாளிகளையும் கல்லால் அடித்து கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நீண்ட நாட்களாக துப்பு துலங்காமல் இருந்தது. 3 மாதத்திற்கு பின்னர் 3 பேரும் ஆலங்குளம் போலீசில் சிக்கியுள்ளனர். இதை தொடர்ந்து முருகன், மகாராஜன், இசக்கிபாண்டி, பாண்டியராஜ், ஹரிதாஸ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications