Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்சல் குருவுக்கு கருணை கூடாது, தூக்கிலிடலாம்-ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

Afzal Guru
டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவின் செயலை மன்னிக்கவே முடியாது. அவருக்குக் கருணை காட்ட முடியாது. அவரை தூக்கிலிட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும், ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகளும் இணைந்து பெரும் தாக்குதல் தொடுத்தனர்.

பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், வெளியில் நடந்த இந்த மிகப் பெரிய தாக்குதலால் நாடே அதிர்ந்தது. நாடாளுமன்றத்திற்குள் புகுந்து எம்.பிக்களையும் பிறரையும் சுட்டுக் கொல்லும் எண்ணத்துடன் தீவிரவாதிகள் முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் இந்திய பாதுகாப்புப் படையினர் மிகவும் தீரத்துடன் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படையினர், ஒரு போலீஸ்காரர், ஒரு தோட்டக்காரர் ஆகியோர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்தவர்களாக கூறப்பட்ட அப்சல் குரு உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து குரு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மனு செய்தார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். அந்த கருணை மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரம் பின்னர் அரசியலானது. அப்சல் குருவை தூக்கிலிட காங்கிரஸ் விரும்பவில்லை, ஓட்டு வங்கியை நினைத்துப் பயப்படுகிறது என்று பாஜக குற்றம் சாட்டியது. காங்கிரஸோ, குடியரசுத் தலைவர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது. அதேசமயம், அப்சல் குரு குறித்த கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருப்தபாக தகவல் வெளியானது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடமும், நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது அப்சல் குரு குறித்த கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்து ராஜ்யசபாவில் நேற்று உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், அப்சல் குரு குறித்த கோப்பு குடியரசுத் தலைவரின் முடிவுக்காகஅவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகத்திடமிருந்து கோப்பு வந்திருப்பதை ராஷ்டிரபதி பவனும் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு என்ன பரிந்துரை செய்துள்ளது என்பது குறித்த தகவலும் கசிந்துள்ளது. நாட்டின் இறையாண்மை மீது அப்சல் குரு தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது செயலுக்கு மன்னிப்பே கிடையாது. அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து அப்சல் குரு கோப்பு மீது விரைவில் குடியரசுத் தலைவர் ஒரு முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணை மனுவை நிராகரித்து அப்சல் குருவைத் தூக்கிலிட குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம் என்று தெரிகிறது. அதேசமயம், கோப்பு மீது முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்கும் முடிவையும் குடியரசுத் தலைவர் எடுக்க முடியும். குடியரசுத் தலைவரின் முடிவுக்கு கால அவகாசம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+