மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் நீதிபதி தினகருக்கு சலுகைகளை மறுத்து கேரளாவில் அவமதிப்பு

ஜார்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி தினகர் 5 ஆண்டுகளுக்கு முன் கேரள மனித உரி்மை ஆணையராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சென்னையைச் சேர்ந்தவர் தினகர். ஓய்வு பெற்றதும் தனக்கு வரவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்கும்படி மனித உரி்மை ஆணைய செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஓய்வு பெறும அன்று வரை நீதிபதி தினகருக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படவில்லை. இதனால் அவை கிடைக்காமல் வெறும் கையுடன் சென்னை திரும்பினார் தினகர்.
இந்த தகவல் கேரள நிதியமைச்சர் கே.எம். மணிக்கு தெரிந்ததும் அது பற்றி விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு நிதித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், நீதிபதி தினகருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை நிறுத்தி வைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு கிடைக்க வேண்டிய ரூ.99 ஆயிரம் பணத்தை அவருடைய வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இது பற்றி மனித உரிமை ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனித உரிமை ஆணைய தலைவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் நீதிபதி தினகர் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. இப்படிப்பட்ட ஒருவரை கேரளா அவமானப்படுத்திவிட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
நீதிபதி தினகர் 1968ம் ஆண்டு அரசு வக்கீலாகவும், கூடுதல் அரசு வக்கீலாகவும் பணியைத் தொடங்கினார்.
பல்வேறு வழக்குகளில் தமிழக அரசின் சிறப்பு வக்கீலாக பணியாற்றியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயின் சிறப்பு வக்கீலாக இவர்தான் பணியாற்றினார்.
1994ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பிறகு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு திரும்பி வந்தார். 2005ம் ஆண்டு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2006ல் ஓய்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications