தூக்கை ரத்து செய்யக் கோரி மதுரையில் 3000 வக்கீல்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம்
மதுரை: மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மதுரையில் கிட்டத்தட்ட 3000 வக்கீல்கள் இன்று முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை செப்டம்பர்9ம் தேதி தூக்கிலிட வேலூர்சிறை நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும், மத்திய அரசையும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. உச்சகட்டமாக நேற்று இளம் பெண் செங்கொடி காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்.
இந்த நிலையில் மதுரையில் வக்கீல்கள் ஒட்டுமொத்தமாக இன்றுமுதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கிட்டத்தட்ட 3000 பேர் இந்த நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இணைந்து இறங்கியுள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைகள் ஸ்தம்பித்துள்ளன.
மூவரையும் தூக்கிலிருந்து விடுவிக்கும் வரை புறக்கணிப்பு தொடரும் என வக்கீல்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
விருத்தாச்சலத்தில் ஸ்டிரைக்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்யக் கோரி விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் அளித்தனர். இந்த மனுவை கோட்டாச்சியர் பெற்றுக் கொண்டார்.
செப். 7ல் டெல்லியில் சிபிஎம் போராட்டம்
இதற்கிடையே, இலங்கைப் போர்க் குற்ற விசாரணை, மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டி வரும் 7-ம் தேதி டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தவிருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலக திறப்பு விழா நடந்தது. அந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கலந்து கொண்டார்.
கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது,
நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக ஒன்று கூடியுள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரிய அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை. அதனுடன் ஜன்லோக்பால் மசோதாவில் உள்ள அம்சங்களை சேர்த்து வலுவானதாக ஆக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், லோக்பால் வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வரவும் சம்மதித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பிறகும் கூட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசு கொடு்தத வாக்குறுதி வாக்குறுதியாகவே உள்ளது.
தற்போது கூட பலர் அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு அவர்களை மீள்குடியேற்றவில்லை. போர்க் குற்ற விசாரணை, மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டி வரும் 7-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தவிருக்கிறோம் என்றார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications