நல்லக்கண்ணு காரை மறித்த 8 வங்கி ஏஜென்டுகள் மீது கொலை முயற்சி வழக்கு!
இவர்களை உடனே ஒப்படைக்குமாறு எச்டிஎப்சி வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் போலீசார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, சென்னை நுங்கம்பாக்கம் அருகே காரில் சென்ற போது அந்த காரை சிலர் வழி மறித்தனர். நண்பரின் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கார் கடனுக்காக வழிமறித்து காரை பறிமுதல் செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர்.
அப்போது அந்த கும்பலுக்கும் நல்லக்கண்ணு நண்பருக்கும் இடையே தகராறு ஏற்படவே நல்லக்கண்ணு காரிலிருந்து இறக்கிவிடப்பட்டார். உடனே அவர் ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றார். இந்த சம்பவம் காட்டுத் தீ போல் பரவியது. நல்லக்கண்ணு தாக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
நல்லக்கண்ணு சென்ற காரை மறித்தது யார்? என்று பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
கார் டிரைவர் சுதிர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் எச்.டி.எப்.சி. வங்கியில் வாங்கிய கார் கடனுக்காக வங்கி ஏஜென்டுகள் 8 பேர் இந்த அடாவடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் (147), தடுத்து நிறுத்தல் (341), கெட்டவார்த்தை பேசுதல் (299 (பி)), கொலை மிரட்டல் 506 (1) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேரையும் உடனடியாக போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த தனியார் வங்கியை போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாகனக்கடன், நுகர்வோர் கடன் பெற்றவர்களை தனியார் வங்கிகள் எந்த அளவு துன்புறுத்துகின்றன என்பதற்கு நல்லக்கண்ணு விவகாரமே சான்று. எனவே இந்த ஏஜென்டுகள் விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்க ஆரம்பித்துள்ளனர்.