பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா அக்டோபர் 20ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நீதிபதிகள் நிராகரித்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பது நியதி. கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள இந்த மனு, பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை மேலும் சில மாதங்கள் தாமதப்படுத்தும் செயலாகவே தெரிகிறது. இதைத் தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதனால் அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும், அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது. அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதை வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாதால் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஜெயலலிதா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், சொத்து குவிப்பு வழக்கில் அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகி வாக்குமூலம் தர வேண்டும். ஜெயலலிதா ஆஜராவதால் பாதுகாப்பை கர்நாடக அரசு பலப்படுத்த வேண்டும். பாதுகாப்பு கருதி விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜெயலலிதாவை வழக்கமான நீதிமன்றத்தில் அல்லாமல் வேறு ஒரு கட்டடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற ஜெயலலிதா தரப்பின் கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியே முடிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications