கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கொத்தனார் கொலை- மனைவி, கள்ளக்காதலன் கைது
தூத்துக்குடி: தனது கள்ளக்காதல் உறவை கண்டித்த கொத்தனாரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி கள்ளக்காதலருடன் போலீசாரிடம் சிக்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் (40). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (34). இவர் ராமரின் உறவினர். இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். கடந்த ஆண்டு, பெரியசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து முத்தையாபுரத்தில் தனியாக வசித்து வந்த பெரியசாமியை, தனது வீ்ட்டில் வந்து தங்கி கொள்ளுமாறு ராமர் அழைத்தார்.
இந்த நிலையில் பெரியசாமிக்கும், ராமரின் மனைவி சுந்தரிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. அதிக குடிப்பழக்கம் கொண்ட ராமர் தினமும் போதையில் வீட்டிற்கு வந்தது கள்ளக்காதல் ஜோடிக்கு மேலும் செளகரியமானது.
இந்நிலையில் குடிப்பழக்கத்தால் ராமரின் உடல் பாதிக்கப்பட்டது. இதனால் குடிப்பழக்கத்தை ராமர் குறைத்தார். இதனால் சுந்தரியும், பெரியசாமியும் தங்களது கள்ளக்காதலைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த சமயத்தில், இருவரும் நெருக்கமாக ஒருமுறை இருந்தபோது அதை ராமர் பார்த்து விட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் கண்டித்தார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்தனர். தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக நிற்கும் ராமரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதன்படி பெரியசாமி ராமருக்கு மது வாங்கி குடிக்க வைத்தார். இதில் போதையில் தள்ளாடிய ராமரை குரும்பூர் காட்டு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு ராமரின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டார். இதில் தலையில் படுகாயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிணத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின்னாக பதிலளித்த இருவரும் கடைசியில் ராமரை திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
கள்ளக்காதலுக்காக உறவினரை கொலை செய்த பெரியசாமி மற்றும் கணவரை கொலை செய்ய உடந்தையாக இருந்த சுந்தரி ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications