சாலையோர டிபன் கடைக்குள் மண் லாரி பாய்ந்து விபத்து-4 மாணவர்கள் பலி
திருவள்ளூர்: சாலையோர டிபன் கடைக்குள் கட்டுபாட்டை இழந்த மண் லாரி புகுந்ததில், கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த 4 பள்ளி மாணவர்கள் பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூரில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று பள்ளி காலாண்டு தேர்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் சிலர் பள்ளி அருகில் உள்ள சாலையோர டிபன் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, ஏறையூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சவுடு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையின் எதிர்புறத்தில் வேகமாக வந்தது. டிபன் கடை அருகே வந்த போது, லாரி கட்டுப்பாடு இழந்து, சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனை இடித்து தள்ளிக் கொண்டு டிபன் கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் டிபன் கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர்களான மோகன்தாஸ், ராஜ்குமார், முனுசாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மற்ற 6 மாணவர்கள் சென்னை மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சபாபதி என்ற மாணவனும் இறந்தான்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்தில் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் லாரியை தீவைத்து கொளுத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு, எஸ்பி வனிதா, டிஎஸ்பிக்கள் பாரதி, பாலச்சந்திரன், வெங்கல் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பெற்றோரும் மற்ற மாணவர்களும் மருத்துவமனைகளில் குவிந்தனர். விபத்தில் 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து நேற்று நடக்க இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா இரங்கல்
இந்த சோகச் சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில்,
4 பள்ளி மாணவர்கள் விபத்தில் இறந்தது குறித்து கேள்விப்பட்டு கடும் துயர் அடைந்தேன். இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என்றார்.












Click it and Unblock the Notifications