11 நாட்களுக்குப் பிறகு கூடங்குளத்தில் அலுவலக பணிகள் துவக்கம்: போலீசார் குவிப்பு
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 11 நாட்களுக்கு பின்னர் இன்று அலுவலக பணிகள் துவங்கின. போலீஸ் பாதுகாப்புடன் பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து கூத்தன்குழி மக்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 13ம் தேதி முதல் முற்றுகை போராட்டம் நடப்பதால் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இந்திய அணுமின் கழக ஊழியர்கள் அவர்களது குடியிருப்பான அணு விஜய் நகரியத்தில் பணிக்காக காத்திருந்தனர். கூடங்குளத்தில் நடக்கும் தொடர் போராட்டம் காரணமாக கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்து விட்டு தங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றுவிட்டனர். இந்நிலையி்ல் இன்று காலை அணு விஜய் நகரியத்தில் இந்திய அணுமின் கழக ஊழியர்கள் மொத்தமாக குவியத் துவங்கினர். கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசி நாத் பாலாஜி, முதன்மை கட்டுமான பொறியாளர் ஜின்னா, மனித வள மேம்பாட்டு துணை பொது மேலாளர் செல்லப்பா, மேலாளர் அன்பு மணி ஆகியோர் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில் 11 நாட்களாக வேலைக்கு செல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனைவரும் தெரிவித்தனர்.
தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்போடு அதிகாரிகள் ஒரு வேனிலும், 7 பேருந்துகளில் அணுமின் நிலைய கழக ஊழியர்களும் பணிக்கு சென்றனர். இதனால் அணுமின் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அணுமின் நிலைய வளாகத்தில் அலுவலக பணிகள் மட்டுமே இன்று நடந்தது. ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.
அணுமின் நிலையத்தில் உள்ள 1வது மற்றும் 2வது அணு உலைக்கான பராமரிப்பு பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாது. இப்பணிகளை துவக்க 3 மாதமாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 11 நாட்களுக்கு பிறகு கூடங்குளத்தில் அத்திவாசிய பணிகள் மட்டுமே இன்று துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications