தேர்தலில் கைடு பண்ண சரியான ஆள் இல்லாததால்தான் தோற்றோம்- இளைஞர் காங். தலைவர் யுவராஜ்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேயர், நகராட்சி தலைவர் பதவிகள் கிடைக்காவிட்டாலும் நகராட்சி, பேரூராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் குறிப்பிடத்தக்க இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் துவக்கத்தில் இருந்தே ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் குரல் அதன் காதில் விழவில்லை. ஆளுங்கட்சியினர் அனைத்து இடங்களிலுமே கள்ள ஓட்டு போட்டனர். அவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
பல இடங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதற்கு கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு பொறுப்பேற்க வேண்டும். வேட்பாளரை கடைசி நேரத்தில் மாற்றியது, காங்கிரஸ் வேட்பாளர் என்பதற்கான பி படிவம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தான் காங்கிரஸ் தோற்றது.
இன்னும் ஒரு சில வாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை கட்சி மேலிடம் நியமிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த புதிய தலைவர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவராக இருப்பார் என்று நம்புகிறோம்.
கடந்த 5 மாதமாக நடந்து வரும் அதிமுக ஆட்சி மக்கள் விரோதமானது. ஏன், அமைச்சர்கள் கூட தங்கள் கருத்துகளை முதல்வரிடம் சுதந்திரமாக தெரிவிக்க முடியவில்லை. சமச்சீர் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட மாநில அரசின் தவறுகளை மூடி மறைக்கும் பொருட்டு முதல்வர் மத்திய அரசை குறை கூறி வருகிறார். மத்திய அரசு வழங்கும் நிதியை இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தி வரும் தமிழக அரசு மத்திய அரசை விமர்சிப்பது முறையன்று.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று இளைஞர் காங்கரிஸார் கண்காணிப்பார்கள். அதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications