செங்கோட்டை அருகே டெட்டனேட்டரை வெடிக்கச் செய்த மாணவன்- போலீஸ் தீவிர விசாரணை

செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
அவரது மகன் அப்துல் முஜீப். பணிபொழியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications