எகிப்திய பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1,229 பேர் உயிர் தப்பினர்
அரபு பிரிஜ் மாரிடைம் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் கப்பல் ஒன்று ஜோர்டான் நாட்டின் அகுபா துறைமுகத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் செங்கடல் வழியாக சென்றது. இந்த கப்பலில் 1230 பயணிகளில் பெரும்பாலானோர் எகிப்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அகுபா வளைகுடா பகுதியில் இருந்து எகிப்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கப்பலில் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் தீ வேகமாக பரவியதால், இது குறித்து கப்பல் பணியாளர்கள், எகிப்தை சேர்ந்த செங்கடல் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று கப்பலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை பெரும் போராட்டத்துக்கு பின் அணைத்தனர்.
இது குறித்து ஜோர்டான் உள்நாட்டு பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பாரித் அல்-ஷாரா கூறியதாவது, தீவிபத்து ஏற்பட்ட போது உயிர் தப்ப சில பயணிகள் கடலில் குதித்தனர். இதில் ஜோர்டானை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்து பலியானார். கப்பலில் தீயினால் ஏற்பட்ட புகையால் பாதிக்கப்பட்ட 12 பேர் ஜோர்டான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் தற்காப்பு படகுகள் மற்றும் மீட்புக் குழுவினரின் படகுகள் மூலம் கரை சேர்ந்தனர், என்றார்.
தீவிபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றொரு பயணிகள் கப்பல் மூலம் நுவெய்பா துறைமுகம் அனுப்பி வைக்கப்பட்டதாக, எகிப்து போக்குவரத்து அமைச்சர் அலி ஜெய்ன் அல் அபிடின் தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.