கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அரசு பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்துகிறது: வைகோ
சென்னை: கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாத காங்கிரஸ் அரசு பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்தி மக்களை வதைக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர்வதை பெட்ரோல் விலை உயர்வு உணர்த்துகின்றது. கடந்த 10 மாத காலத்தில் மட்டும் 23 விழுக்காடு உயர்த்தி இருக்கின்றார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் மட்டும் 5-வது முறையாக உயர்த்தி இருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பரில் தான் லிட்டருக்கு 3.14 அதிகரிக்கப்பட்டது. 2 மாதங்களுக்குள்ளாக ரூ.1.80 உயர்த்துவதை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டின் பணவீக்க விகிதம் 9.72 விழுக்காடு ஆகவும், உணவுப் பொருள் பணவீக்கம் 12.21 விழுக்காடு ஆகவும் அதிகரித்து உள்ள நிலையில், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகின்றது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி இழப்பீட்டுத் தொகை மத்திய அரசு வழங்கி உள்ள நிலையில் அவை நட்டம் அடைவதாக எப்படிக் கூற முடியும்? 2 மாதத்தில் என்ன பெரிய நட்டம் வந்து விடப்போகின்றது?
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணையின் மாறுபாடு தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்றால் அண்டை நாடுகளான சீனாவில் பெட்ரோல் விலை இந்தியாவை விட 50 விழுக்காடு குறைவாகவும், பாகிஸ்தானில் 48 விழுக்காடு குறைவாகவும், பங்களாதேசத்தில் 52 விழுக்காடு குறைவாகவும் உள்ளதே? கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர இயலாத, காங்கிரஸ் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கின்றது. அடித்தட்டு ஏழை எளிய மக்களை உடனடியாகப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications