அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மீண்டும் கனமழை காத்திருக்கு!

வடகிழக்கு பருவமழையினாலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. அணைகள், ஏரிகள், குளங்கள் அணைத்தும் நிரம்பி வழிகின்றன.
சென்னையை அடுத்துள்ள புழல் ஏரி நிரம்பியுள்ளதால் அங்கிருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆற்றுநீர் வரும் கால்வாய் உடைந்ததை அடுத்து பொன்னேரி அருகே வடபெரும்பாக்கம் கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியில் ஏரி உடைந்ததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக விரோதிகள் யாரும் ஏரியை உடைத்து சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பவானி ஆறு மற்றும் மோயாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 85 அடி ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவகங்கை, தேவகோட்டை தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் வங்க கடலில் ஈரமான காற்றினை தமிழகத்தின் ஊடாக ஈர்ப்பதால் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications