சென்னையில் இருந்து சபரிமலைக்கு தரிசன சுற்றுலா-ரயில்வே ஏற்பாடு
சென்னை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) சபரிமலை ஐயப்ப தரிசன சுற்றுலா ரயில் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து சென்று வர ஒருவருக்கு ரூ.1,890 கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி நிர்ணயம் செய்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோடை வாசஸ்தலங்கள், புனித யாத்திரை மையங்களுக்கு சுற்றுலா “பேக்கேஜ்களை" அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு பேக்கேஜ் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. மண்டல மேலாளர் கே. ரவிக்குமார் கூறுகையில்,
ஐ.ஆர்.சி.டி.சி. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்காக சிறப்பு யாத்திரைகளை நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் நடத்த உள்ளது.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் உறுதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுகளுடன் இந்த சபரிமலை யாத்திரை ரயில் பயணம் அமையும்.
நபர் ஒருவருக்கு ரூ. 1,890:
இந்த மாதம் 21, 24, டிசம்பர் 1, 5, 15, 19, 22 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் சபரிமலை ரயில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் சென்னையில் இருந்து செல்லவும், தரிசனம் முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பவும் என 4 நாட்கள் பயணத்துக்கு ரூ.1,890 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணத்தில் உறுதி செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் கோட்டயம்- நிலக்கல் சென்று வர வாகன வசதியும் உட்பட்டது.
இந்த யாத்திரை பயணம் செய்ய விரும்புபவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-64594959, 90031-40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இதய நோயாளிகளுக்காக சபரி்மலையில் சிறப்பு மருத்துவ வசதி
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. மண்டல, மகர விளக்கு கால பூஜை சமயங்களில் சபரிமலைக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பல செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து செல்ல வேண்டும். அப்போது இதயம் பலகீனமாக உள்ள பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இறக்கின்றனர்.
மாரடைப்பு ஏற்படும் பக்தர்களுக்கு சபரிமலையில் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து இந்தாண்டு முதல் அவ்வாறு மாரடைப்பால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கேரள மருத்துவ சேவை கழகம் ரூ.2.25 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை தயாரித்துள்ளது. இதன்படி சபரி்மலைக்கு அருகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ரூ.57 லட்சம் செலவில் இதய சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஓஒர்லெஸ் செட் வழங்கப்படுகிறது. இதற்காக போலீசாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட உள்ளது. இவை ஆங்கிலம், மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும்.
பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் மலைப் பாதையில் சில இடங்களில் ஆக்ஜிசன் பார்லர்கள் உள்ளன. இங்கு இருக்கும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு ஏராளமான ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. தற்போது குறைந்த எண்ணிக்கையில் தான் ஆம்புலன்ஸ் உள்ளது. எனவே தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் இருந்து ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications