உறவினர் வீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளை விபத்தில் பலி: உறவினர்கள் மறியல்
கிருஷ்ணகிரி: மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
கிருஷ்ணகிரி அவதானப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (21). டிப்பர் லாரி டிரைவர். அவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று காலை அவர் வேட்டியம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து உறவினர் வீட்டிற்கு பைக்கில் கிளம்பினார். அவர் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது சிங்காரப்பேட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அவர் பைக் மீது மோதியது.
இதில் பேருந்தின் பின்சக்கரம் முருகன் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பைக்கும் அப்பளம் போல் நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வந்த வேகத்தில் பேருந்தை அடித்து நொறுக்கினர். ஒழுங்கான சாலையில்லாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே தாசில்தார் மணி, டி.எஸ்.பி. ரவிக்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு போலீசார் முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியலால் கிருஷ்ணகிரியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.