கிருஷ்ணகிரியில் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து 60 யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்த 60 யானைகள் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசப்படுத்தின.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொலமங்கலத்தில் உள்ள காட்டுப் பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்துவது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 60 யானைகள் கும்பலாக ஊருக்குள் புகுந்தன. கொத்தப்பள்ளி, சோடேகானேபள்ளி, குருபரபள்ளி உள்ளி்ட்ட ஊர்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருருந்த கரும்பு, சோளம், ராகி, நெல் ஆகிய பயிர்களை தின்றும், மிதித்தும் யானைகள் சேதப்படுத்தின. விவசாய நிலத்தின் நடுவே இருந்த ஆனந்தன் என்பவரின் வீட்டையும் யானைகள் இடித்து தள்ளின.
யானைகள் கூட்டமாக வந்ததால் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் செய்வது அறியாமல் தவித்தனர். கொத்தபள்ளியைச் சேர்ந்த ஆனந்தன், மல்லேஸ், மாரப்பன், பாப்பண்ணா ஆகியோருக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தின. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications