இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு ஆசைப்பட்டவர்களுக்கு கிடைத்த பரிசு பால், பஸ் கட்டண உயர்வு: பாஜக
திருச்சி: மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு இலவசமாக கிடைக்குமே என்று ஆசைப்பட்டு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த பரிசு தான் பால், பஸ் கட்டண உயர்வு என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆயில்மில் கடை வீதியில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இலவச மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடுக்கு ஆசைப்பட்டு மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். அப்படி வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு கொடுத்த பரிசு தான் பால் விலை, பஸ் கட்டண உயர்வு. பஸ் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பால் லிட்டருக்கு ரூ. 6 அதிகரித்துள்ளது. ஒரு குழந்தைக்கு சத்துணவு என்றால் அது பால் தான். தற்போது பால் விற்கின்ற விலையில் ஏழை, நடுத்தர தாய்மார்களால் அவ்வளவு பணம் கொடுத்து பால் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமா. எனவே, பஸ் கட்டணைத்தைக் குறைக்காவிட்டாலும், பால் விலையையாவது குறைக்க வேண்டும்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு நகராட்சி, பேரூராட்சிகள், ஒன்றிய பதவிகளை கைப்பற்றியுள்ளது. பாஜகவால் ஊழலை ஒழிக்கவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரவும் முடியும்.












Click it and Unblock the Notifications