வலுவான லோக்பால் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்-அன்னா மிரட்டல்
டெல்லி: வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என்று அன்னா ஹஸாரே ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்பித்துள்ள லோக்பால் மசோதா மீது அன்னா குழுவினருக்கு திருப்தி இல்லை.
இதையடுத்து நேற்று அன்னா டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அதற்கு பாஜக, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து தங்கள் பிரதிநிதகளை அனுப்பி வைத்தன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அனனா கூறியதாவது,
இந்தியாவில் இருந்து ஊழலை விரட்ட லோக்பால் மசோதா கண்டிப்பாகத் தேவை. வலுவான லோக்பால் மசோதா கிடைக்கும் வரை போராடுவோம். எங்கள் போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் லோக்பால் விவகாரம் தொடர்பாக காங்கிரஸை சும்மா விட்டுவிடப் போவதில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாடாளுமன்றத்திற்குள் நடக்க வேண்டுமே தவிர வெளியே நடக்கக் கூடாது என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகத் தான் பிரதமர் மன்மோகன் சிங் வரும் 14ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications