முல்லைப் பெரியாறு பிரச்சினையை 'கேப்டன்'தான் தீர்க்க வேண்டும்- தேமுதிக பேச்சாளர் தற்கொலை
விருத்தாச்சலம்: முல்லைப் பெரியாறு அணையை விஜயகாந்த்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தேமுதிகவைச் சேர்ந்த மேடைப் பேச்சாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தேமுதிகவில் மேடைப் பேச்சாளராக இருக்கிறார். 30 வயதான இவர் நேற்று விருத்தாச்சலம் வந்தார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார். பின்னர் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதன் பின்னர் நகரச் செயலாளர் சங்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு உடல் நிலை சரியில்லை, உடனே வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து சங்கர் வந்தார். அப்போது அறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேகர். இதையடுத்து அவரை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
அவர் விஷம் சாப்பிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் அறையில் விஜயகாந்த்துக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் எழுதுவது. முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அணையை உடைத்தால் 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாச்சலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், இந்தத் தொகுதி மக்கள்தான் தேமுதிகவுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால்தான். என்னை மன்னியுங்கள் என்று கூறியுள்ளார் சேகர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.