தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தர தயார்- கேரள அமைச்சர் ஜோசப் கூறுகிறார்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் இருந்து இப்போது வழங்குவதை விட தமிழக அரசு கூடுதலாக தண்ணீர் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பி.ஜே ஜோசப் கூறியுள்ளார். அணை விவகாரம் குறித்த தமிழ்நாட்டுடன் பேச கேரளா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பி.ஜே.ஜோசப் பேசியதாவது,
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை என்பது கேரள மக்களின் பாதுகாப்பு தொடர்பானது. எனவே புதிய அணை கட்டும் முடிவில் இருந்து கேரளா ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. சமீபத்தில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. எனவே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விசயம்.
கூடுதல் தண்ணீர்
எங்களுடைய நிலைப்பாடானது கேரளத்துக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதுதான். அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச கேரளா தயாராகவே இருக்கிறது. தற்போது வழங்கும் தண்ணீரை விட தமிழக அரசு கூடுதல் தண்ணீர் கேட்டாலும் தருவதற்கு கேரளா அரசு தயாராக இருக்கிறது. இது பற்றி ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளலாம் இவ்வாறு கேரள பாசன துறை அமைச்சர் ஜோசப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications