கள்ளக்காதலா என்று சந்தேகம்-கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொல்ல முயன்ற மனைவி
சேலம்: கணவருக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகித்த மனைவி தனது கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டார். இதில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் அங்கனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. 35 வயதாகிறது. இவரது மனைவி சித்ரா. இவருக்கு 32 வயதாகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார் சித்ரா. இதுகுறித்து கணவருடன் சண்டை போட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பெரியசாமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சித்ரா, பெரிய சட்டியில் எண்ணெயை காய்ச்சியுள்ளார். கொதிக்க கொதிக்க காய்ச்சிய பின்னர் அந்த எண்ணெயை எடுத்து கணவர் மீது ஊற்றியுள்ளார்.
இதில் தீக்காயம் அடைந்த பெரியசாமி அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்போர் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவீத தீக்காயமடைந்துள்ளார் பெரியசாமி என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சித்ரா மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்குத் திருமணமாகி 10 வருடங்களாகிறதாம். இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சித்ரா இப்படிச் செய்து விட்டது இரு குடும்பங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications