ஜெயிலர் அறையில் 'குண்டாஸ்' கைதியை சந்திக்க கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு!
மதுரை: மதுரை மத்திய சிறையில் ஜெயிலர் அறையில் வைத்து காஜாமலை விஜயை பார்க்க திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடு்தது அவர் பிற கைதிகளை உறவினர்கள் பார்க்கும் இடத்தில் வைத்து காஜாமலையை சந்தித்து பேசினார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளரும், அக்கட்சியின் நிர்வாகியுமான காஜாமலை விஜய் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் திருச்சி சிறையில் இடநெருக்கடி காரணமாக கடந்த 13ம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவரை சந்திக்க கே.என்.நேருவும், திருச்சி முன்னாள் துணை மேயர் அன்பழகனும் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். ஜெயிலர் அறையில் வைத்து காஜாமலையை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் கே.என். நேரு அமைச்சராகவும் மற்ற அரசு பொறுப்பில் இல்லாததாலும், சிறை விதிகளை காரணம் காட்டி 'குண்டாஸ்' கைதியை ஜெயிலர் அறையில் சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து பிற கைதிகள், உறவினர்கள் சந்திக்கும் இடத்தில் காஜாமலை விஜயை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 7 நிமிடங்கள் நீடித்தது.












Click it and Unblock the Notifications