தனிமைச் சிறையில் திவாகரன்..கைதிகளுக்கான உணவை மறுத்து கேண்டீனில் சாப்பிடுகிறார்!
திருச்சி: வீடு இடிப்பு வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் தம்பி திவாகரன், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை மறுத்து விட்டு கேண்டீனில் விற்கப்படும் உணவை வாங்கிச் சாப்பிடுகிறாராம். தனது உறவினர்கள் கொண்டு வந்து கொடுத்த பழத்தைக் கூட சாப்பிட மறுத்து விட்டாராம். பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் அவரை தனிமைச் சிறையில் தனியாக அடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.
ராஜாதி ராஜாக்களாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா குடும்பத்தினர் இன்று ஒவ்வொருவராக சிறைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். முதலில் ராவணனை கைது செய்தனர். பின்னர் திவாகரன் கைது செய்யப்பட்டார். ராவணன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திவாகரனை திருச்சியில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி கஸ்தூரியின் தொகுப்பு வீடு மற்றும் மாமனார் மாணிக்கத்தின் வீடுகளை கடந்த இடித்த வழக்கில் திவாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திவாகரன். அந்த அறையில் இவர் மட்டுமே தனியாக இருக்கிறாராம். உள்ளே வந்த அவருக்கு கைதிகளுக்குத் தரப்படும் உணவைக் கொடுத்தனராம். ஆனால் அதை சாப்பிட மறுத்து விட்ட திவாகரன், காசு கொடுத்து கேண்டீனில் உணவு வாங்கிச் சாப்பிட்டாராம்.
அதேபோல அவரைப் பார்க்க வந்த உறவினர்கள் கொடுத்த பழங்களையும் கூட வாங்கிக் கொள்ளவில்லையாம்.
சோகமாக காணப்படும் அவர் சில நேரங்களில் பெரும் வருத்தத்தில் மூழ்கியிருப்பதாகவும், சில நேரம் மனதை திடமாக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திவாகரனைப் பார்க்க அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று சிறை நிர்வாகத்திடம் திவாகரனின் வக்கீல் கேட்டுக் கொண்டுள்ளாராம். வேறு யாரையும் சந்திக்க திவாகரனே விரும்பவில்லையாம்.
சிறைவாசம் திவாகரனை பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளதாகவும், அவர் அறையை விட்டு வெளியே வருவதில்லை என்றும் கூறுகிறார்கள்.