9ம் தேதி பெங்களூர் கோர்ட்டுக்கு வருகிறார் சசிகலா... 'பேசுவாரா'?

கடந்த பல ஆண்டுகளாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சசியின் அண்ணி இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நிலுவை + இழுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நேரில் ஆஜராகி 4 நாட்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த சொத்துக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது அத்தனை புகார்களும் சசிகலா உள்ளிட்டோர் மீது திரும்பியுள்ளது. பெங்களூர் விசாரணைக்குப் பின்னர்தான் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே பெரும் பிரளயம் ஏற்பட்டு பிரிந்தனர். சசிகலா குடும்பமே கூண்டோடு நீக்கப்பட்டது
இந்த நிலையில் வருகிற 9ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜராக வேண்டியுள்ளது. அன்றைய தினம் அவர் வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஆவணங்களை தமிழில் கேட்டு சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. இதனால் 9ம்தேதி சசிகலா கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அன்று அவர் திட்டமிட்டபடி ஆஜராவாரா, ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா, அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா பிரிந்த பின்னர் சென்னையிலேயே ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். அவர் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் பெங்களூர் கோர்ட்டில் இப்படித்தான் பேச வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அவர் அனுப்பி வைக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications