இடைத்தேர்தல் : சிறப்பு தேர்தல் அலுவலர் பிப் 14ல் நெல்லை வருகை
நெல்லை : சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த சிறப்பு தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் நாளை மறுநாள் 14ம் தேதி நெல்லை வருகிறார். தேர்தல் பணிகள் தொடர்பாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளராக சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் முத்துசெல்வி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டார். மதிமுகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தபணிகளை தொடங்கி விட்டன. திமுகவும் ஒரு சில நாளில் தங்களது வேட்பாளரை அறிவிக்கும் என தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சங்கரன்கோவில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டன. குறிப்பாக ஆளும்கட்சியான அதிமுகவின் பார்வை முழுவதும் சங்கரன்கோவில் தொகுதி பக்கம் திரும்பியுள்ளது. இலவச பொருட்கள், இலவச மருத்துவ முகாம் என தொகுதியில் உள்ள மூன்று யூனியன்களையும் குறிவைதது அனைத்து உதவிகளும் தாமாகவே பொது மக்களை தேடி செல்கின்றன.
அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஆகி விட்ட நிலையில் தேர்தல் கமிஷனும் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழக சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் பிப்ரவரி 14ம் தேதி செவ்வாய்கிழமையன்று நெல்லை வருகிறார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு அறிவிக்கப்பட உள்ள அலுவலர் பட்டியல், பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக சிறப்பு தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அலுவலரும், கலால் பிரிவு உதவி ஆணையருமான செல்வராஜ், சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.