செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டியை தேடிய மக்கள்
செங்கோட்டை: தென்னக ரயில்வே அறிவிப்பைத் தொடர்ந்து செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டியைக் காணாமல் மக்கள் அலைந்து திரிந்தனர்.
செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு காலை 7 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி ஆகிய 3 நேரங்களில் பயணிகள் ரயில் 15 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்திய பின் செங்கோட்டை முதல் விருதுநகர் வரையிலுள்ள பல்லாயிரக்கணக்கான பயணிகள் மதுரை செல்ல இந்த ரயிலையே நம்பியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டத்தால் கூடுதல் ரயில் இயக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும், போராட்டமும் நடத்தினர்.
இதனை தொடர்ந்து கடந்த 8ம் தேதி தென்னக ரயில்வே சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் பயணிகள் நெருக்கடியைத் தவிர்க்க கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. மதுரையிலிருந்து புறப்படும் பாஞ்சர் ரயில்களிலும் (56731, 56735), செங்கோட்டையிலிருந்து புறப்படும் பாஞ்சர் ரயிலிலும் (56734) கடந்த 8ம் தேதி முதலும், செங்கோட்டையிலிருந்து புறப்படும் பாஞ்சர் ரயில்ளிலும் (56732, 56736), மதுரையிலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயிலிலும் (56733) கடந்த 9ம் தேதி முதலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட ரயில்வேயின் அறிவிப்பை கண்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் தென்னக ரயில்வே அறிவித்தபடி கூடுதல் ரயில் பெட்டியை மட்டும் இணைக்காமல் மறந்து விட்டது. அறிவிப்பு வெளியிட்டு 6 தினங்கள் ஆகியும் இன்று வரை அறிவித்தபடி கூடுதல் பெட்டியை இணைக்க தென்னக ரயில்வே அதிகாரிகள் மறந்துவிட்டனர். பயணிகள் புதிய பெட்டியை தேடி அலைகின்றனர்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செங்கோட்டை-ஈரோடு புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்ததை போல் தான் இந்த அறிவிப்பும் என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications