சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : 61 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – கூடுதல் பாதுகாப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் 61 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 242 வாக்கு சாவடிகள அமைக்கப்பட உள்ளன. இதில் 61 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 12 வாக்கு சாவடிகளும், சங்கரன்கோவில் யூனியனில் புளியம்பட்டி, களப்பாகுளம், செந்தட்டி, நெடுங்குளம் ஆகிய 5 வாக்குசாவடிகளும், மேலநீலிதநல்லூர் யூனியனில் கடையாலுருட்டி, வேலப்பாநாடானூர், கடம்பன்குளம், திருமலாபுரம், சேர்ந்தமங்கலம், குலசேகரமங்கலம், வென்றிலிங்கபுரம், பெரியகோவிலான்குளம், குருக்கள்பட்டி, சொக்கநாச்சியாபுரம், அச்சம்பட்டி, மேலநரிக்குடி, கூவாச்சிபட்டி, தேவர்குளம், ஜமீன்இலந்தைகுளம், ஆகிய 19 வாக்கு சாவடிகளும், பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல் குருவிகுளம் யூனியனில் கீழநீலிதநல்லூர், மலையான்குளம், பெருங்கோட்டூர், செவல்குளம், கள்ளிகுளம், ஆலடிபட்டி, சம்சிகாபுரம், கலிங்கப்பட்டி, பாறைப்பட்டி, இளையரசனேந்தல், மைப்பாறை, குருவி்குளம், வடக்கு குருவிகுளம், கே ஆலங்குளம், வாகைகுளம், கீழ அழகுநாச்சிபுரம், வடக்கு அழகுநாச்சிபுரம், அழகனேரி, வெங்கடாசலபுரம், சாயமலை ஆகிய 25 வாக்கு சாவடிகள் என மொத்தம் 61 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.